Friday, June 13, 2008

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (11)

நோன்புக் காலங்களில் உண்ணும் முறைபற்றி நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடச் சொல்லியிருக்கிறார்.
" அதிகாலை நேரம் என்ற வெள்ளை நூல் இரவு என்ற கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளி வாசலில் தனித்து இருக்கும் போது, உங்கள் மனைவி யருடன் கூடாதீர்கள்.
இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளைத் தாண்ட முற்படாதீர்கள்; இவ்வாறே கட்டுப்பாடுடன் தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.... என்கிறார்.

காலையிலிருந்து, நோன்பு திறக்கும் (இ·ப்தார்) வரையில் அடக்கி வைத்திருக்கும் ஆசையை நோன்பு திறந்து உணவு உண்ணும் நேரத்தில், கட்டுக்கடங்காமல் விட்டுவிடுவது, நோன்பிற்கான அடிப்படைக் காரணத்தையே தகர்த்துவிடும். அளவுக்கதிகமான பசியும், தாகமும் இருப்பது இயற்கை.

அதைக் கீழ்க்கண்ட முறையில் கடைபிடிப்பது பல அஜீரணக் கோளாறுகளிலிருந்தும் உடலை நீண்ட காலத்திற்கு காப்பாற்றும்.
நோன்பு திறக்கும்பொழுது பல அமிலங்கள் சுரந்து வயிற்றில் நிறைந்து நிற்கும், வாயில் உள்ள கசடுகளையும், குடல்கள், வயிற்றில் உள்ள கசடுகளையும் நீக்கும் தன்மை கொண்டது, தேன்.
மேலும் வயிற்றில் நிறைந்துள்ள அமிலத்தின் தன்மையை மாற்றி வயிறு உப்புசம், ஏப்பம், விக்கல், வயிற்று எரிச்சல் போன்றவற்றை தவிர்க்கும் சக்திவாய்ந்தது.

1. பேரீச்சம்பழத்தை, தேனுடன் நனைத்து நன்கு மென்று சாப்பிடுவது நல்லது.
2. எலுமிச்சம் பழச்சாற்றில், இனிப்புக்கு ஏற்றவாறு தேனும், தண்ணீரும் கலந்து மெல்ல மெல்ல பருகுவது நல்லது (ஐஸ் சேர்க்கக்கூடாது, சீனி சேர்க்கக் கூடாது)
3. தேநீர், காபி போன்றவற்றை சுத்தமாக தவிர்க்கவேண்டும். (நோன்பு திறக்கும் நேரத்தில்)
4. எலுமிச்சம் பழச்சாற்றை விரும்பாதவர்கள், சாத்துக்குடி, அன்னாசி பழச்சாற்றை தேனுடன் கலந்து ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
5. இளநீர் மிக நன்மை தரும். இதுவும் வயிற்றிலுள்ள நச்சுக்களை நீக்கும், இந் நச்சுக்கள் சிறுநீராக மாறி வெளியேறிவிடும்.
6. புகை பிடிப்பதன் மூலமாகவோ, ஐஸ் மற்றும் குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு அதிகமுள்ள பானங்களின் மூலமாகவோ நோன்பு திறப்பது மிகவும் ஆபத்து. வயிற்றில் உள்ள அமிலத்தை மேலும் அதிகமாக சுரக்கச்செய்து உடல் நலத்தையே பாழடித்துவிடும்.
7. எந்த பானங்களையும் உபயோகிக்கலாம், ஆனால் வாயு நிரம்பியதாகவோ, ஐஸ் சேர்க்கப் பட்டதோகவே, சீனி சர்க்கரை சேர்த்ததாகவோ இருக்கக்கூடாது, இனிப்புக்கு தேன் ஒன்றே போதுமானது.
8. சூடான பானங்களில் நோன்பு திறக்க விரும்புபவர்கள் காய்கறி சூப், கோழி சூப், ஆட்டு சூப் போன்ற வகைகளை உபயோகிக்கலாம், இதில் மிளகாய் இல்லாமல், சிறிதளவு மிளகு சேர்த்து உபயோகித்தல் நலம் பயக்கும்.
9. எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் (பஜ்ஜி, வடை, சமோசா) வைத்து நோன்பு திறக்காதீர்கள், சாப்பிடும்போது உபயோகியுங்கள்.
மேற்கூறிய பானங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பருகிவிட்டு 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை உணவு உண்ணாமல் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றும், இவ்வாறு சிறிது இடைவெளிக்குப் பிறகு உண்ணுவதால் உணவு நன்கு ஜீரணிக்கப்படும்.

வயிற்று உபாதைகள் இல்லாமலும், மயக்கம், தளர்ச்சி, சோர்வு இல்லாமலும் உடலை நல்ல முறையில் வைத்திடும், அதிகமாக காரம் உள்ள உணவையும், வயிறுமுட்ட உண்ணுதலையும் தவிர்ப்பதன் மூலமாகவும், மெதுவாக சாப்பிடுவதன் மூலமாகவும் மேலும் உடல் நலத்தை வலுப்படுத்த முடியும்.
அதிகமாக சாப்பிடவேண்டும் என்ற‌ எண்ணம் உள்ளவர்கள் அந்த உணவை 2 வேளைகளாகப் பிரித்து 7 முதல் 7.30க்குள் ஒரு வேளை உணாகவும் 10 முதல் 10.30க்குள் இன்னொரு வேளையாகவும் பாதிப்பாதியாக உண்ணலாம். உணவைப் பார்க்கும்போதெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது அடுத்த நாள் காலை (ஸஹர்) வேளைச் சாப்பாட்டைப் பாதிக்கும்.

ஆசையினால் வயிறுமுட்ட உண்டுவிட்டு திக்குமுக்காடுபவர்கள் சிறுக சிறுக வெந்நீரை அருந்துவது ஜீரணத்திற்கு ஏற்ப வயிற்றை பதப்படுத்திவிடும். ஐஸ் தண்ணீர், டீ, காபி குடிப்பது வயிற்றை பதப்படுத்துவது போல் தோன்றினாலும் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

இவ்வாறு நோன்பு நோற்கும் கலையை வளர்த்துக்கொண்டால் இரவு நேர வணக்கத்தில் (தராவிஸ்) சோர்வு, தூக்கம், மயக்கம் போன்றவைகளின் தாக்கம் அதிகமாக இராது, அடுத்த நாள் ஸஹர் வேளையில், தாமாகவே பசி எடுக்க ஆரம்பிக்கும். காலையில் தூக்கம் அதிகமாக வராது, உடல் மெலிவு ஏற்பட்டு தெம்பும் பிறக்கும்.

ஏழை எளியவர்கள் வறியவர்கள் இவங்க மேலேஅனுதாபம் கொள்ள கத்துக்குடுக்குது. நோன்பு இருக்கறதுனாலே மருத்துவ ரீதியாவே பல மாறுதல்கள் உடம்புலே ஏற்படுது. ரத்த அழுத்தத்தை அது குறைக்குதாம். ரத்தக் கட்டியை கரைக்கிற சக்தியை ரத்தத்துலே அதிகப்படுத்துது. Myocardial infraction ஆலே ஏற்படற உயிரிழப்பு பாதியா குறையுது.

தண்ணீர் சாப்பிடாமே இருக்கிறப்போ பிட்யூட்டரி சுரப்பியின் பின்பகுதி (Anti Diuretic Harmoneஐ சுரக்குது. வெளியாகிற சிறுநீர் அளவை இது குறைச்சுடும். அதனாலே உடம்புலே தண்ணீர் சேமிக்கப்படுது.

நோன்பு காலத்துலே Blood Sugar சீரா, ஒரே அளவா இருக்கிற மாதிரியும் உடம்பு அட்ஜெஸ்ட் பண்ணிக்குது.
இப்படி... இதுமட்டுமில்லே, இன்னும் எவ்வளவோ அட்ஜெஸ்ட்மெண்ட் உடம்புக்குள்ளே நடக்குது.நோன்புன்னா... சாப்பிடாமே இருக்கிறது, தண்ணி குடிக்காமே இருக்கிறது... மட்டும் இல்லே...

உலக சுகங்கள் போகங்கள் வேண்டாம்ன்னு ஒதுக்கறது. அடுத்தவங்க மேலே அனுதாப உணர்வு வளர்றதுக்கும் சகிப்புத் தன்மை வளர்றதுக்கும் நோன்பு துணையா இருக்கு!
உலகத்துலே மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் சரியா புரிஞ்சிக்காததுனாலேதான் பலவிதமான பிரச்னைகள் உண்டாகுது.
மனுஷனுக்கு நிம்மதி குறையறதுக்கே இதுதான் முக்கியமான காரணம். பிரச்னையை சரியா புரிஞ்சிக்கிற திறமை நம்மகிட்டே இருந்தா அதை உடனடியா தீர்க்கறதும் சுலபமா இருக்கும்.

மனிதனை மனிதன் சரியா புரிஞ்சிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் குடுக்கறது நோன்புதான். இந்த நோன்பு இறைவனுக்கு நாம ரொம்ப நெருக்கமா இருக்கோம்ங்கற உணர்வை ஏற்படுத்தற நோன்பு!
இதுவரைக்கும் நான் சொன்னது இறைவன் பேர்லே நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடிக்கிற நோன்பை பத்தி.

இதெல்லாம் இருக்கட்டும். இறைவன் பேர்லே நம்பிக்கையே இல்லாத ஒருத்தன் சாப்பிடாமே இருக்கணும்ன்னு ஆசைப்பட்ட கதை ஒண்ணு உங்களுக்குத் தெரியுமா?
அவருகிட்டே ஒருத்தர்... "நம்ம வயிற்றை நிரப்பறது ஆண்டவன்தான்" அப்படின்னார்.
"அது எப்படி... அவரு வந்து நிரப்புவார்...? நாம தானே கையாலே எடுத்து சாப்பிடணும்"ன்னான் இவன்.

அது மட்டுமில்லே அதை சோதிச்சிப் பார்க்கணும்ன்னும் ஆசைப்பட்டான்.
உடனே மனைவிகிட்டே போனான். கட்டுச் சோறு கட்டிக்குடுன்னான். ஒரு பொட்டலம் கட்டி எடுத்துக்கிட்டான். நேரா மனுஷனே இல்லாத ஒரு பாலைவனத்துக்குப் போனான். ஒரு இடத்துலே உக்கார்ந்தான்.
சோற்றுப் பொட்டலத்தை முன்னாடி வச்சான். "நான் இதை கையாலே தொடப் போறதில்லே... நானா சாப்பிடாதப்போ... ஆண்டவன் எப்படி என் வயிற்றை நிரப்புவார் பார்க்கலாம்"ன்னான்.

கையை கட்டிக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு பேசாமே உக்கார்ந்துகிட்டான். கொஞ்ச நேரம் ஆச்சு. அந்தப் பக்கமா ரெண்டு ஆசாமிகள் வந்தாங்க.
அவங்களுக்கு அகோரப் பசி. ரெண்டு பேர்லே ஒருத்தன் அந்த பொட்டலத்தை எடுக்கப் போனான்.

இன்னொருத்தனுக்கு சந்தேகம்.

"இவன் ஏன் பொட்டலத்தை வச்சிக்கிட்டு சாப்பிடாமே உக்கார்ந்திருக்கான். ஒருவேளை இதுலே விஷம் கலந்திருக்குமோ?"ன்னான். இருந்தாலும் இருக்கும்!'ன்னான் இன்னொருத்தன். அந்த ஆள் கிட்டேயே கேப்போம்ன்னு பேச்சுக்குடுத்துப் பார்த்தான்.

அந்த ஆள் பேசவே இல்லை. சந்தேகம் வலுத்தது. ரெண்டு பேரும் அந்த ஆளை வலுக்கட்டாயமா பிடிச்சிக்கிட்டு வாயிலே சாப்பாட்டை திணிச்சாங்க...
வேறே வழியில்லே... சாப்பிட்டுட்டான். இப்ப அந்த ஆளுக்கு வயிற்றை நிரப்பினது யார்?

யோசிச்சிப் பாருங்க.
அதுக்கப்புறம் அந்த பொட்டலத்துலே இருந்துது பூராவையும் அந்த ரெண்டு பேரும் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க.

இந்த ஆள் ஆச்சரியப்பட்டுப் போய் உக்காந்திருந்தான்.
"என்னப்பா இறைவனோட கருணையை நினைச்சி ஆச்சரியப்பட்டுக்கிட்டிருக்கியா?"ன்னு அவனைப் பாத்து கேட்டார் பழைய நண்பர்.

அதுக்கு அவன் "நான் அதை நினைச்சி ஆச்சரியப்படலே..." எப்பவும் நான் கஷ்டப்பட்டு சாப்பிடற எங்க வீட்டு சமையலை அவ்வளவு பிரியமா அந்த ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களே... அந்த அளவுக்கு அதுலே என்ன இருக்கு? அதை நினைச்சித்தான் திகைச்சிப் போய் உட்கார்ந்திருக்கேன்!" அப்படின்னான்.

No comments: