Friday, June 13, 2008

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (12)

ரம்ஜான்.... ரமதான்...ரமலான் என்றழைக்கப்படும் புனித மாதம் எத்தகையது என்பது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கும்போது....
" ரமதான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறரோ அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்குச் சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் நோன்பில் விடுபட்டுப் போனதைப் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழிக் காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான், " என்கிறார்.


ஒரு தேர்! அந்தத் தேர்லே 5 குதிரை பூட்டியிருக்கு! அந்தத் தேர் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் பத்திரமா போய்ச் சேரணும்ன்னா, 5 குதிரையும் ஒரே வேகத்துலே போகணும்! ஒரே திசையிலே போகணும். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசையிலே போனாலும் ஆபத்து!


ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வேகத்துலே போனாலும் ஆபத்து! அதுசரி... எங்கே இருக்கு அந்தத் தேர்?ன்னு கேக்கறீங்களா? நம்ம சரீரம்தான் அந்தத் தேர். ஐம்புலன்கள்ன்னு சொல்றோமே மெய், வாய், கண், மூக்கு, செவி அது ஐந்தும் 5 குதிரைகள். அது அஞ்சும் ஒரே திசையிலே போகணும். அதை மறந்துட்டு, கை ஒண்ணு செய்ய, வாய் ஒண்ணு பேச, கண் ஒண்ணு பாக்க.. இப்படி இருந்தா வாழ்க்கை என்னத்துக்கு ஆவும்? வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கான ஒரு முயற்சி தான் நோன்பு.


நோன்பு நோற்கும் காலங்களில் இசுலாமியச் சகோதரர்கள் மனதை கஷ்டப்படுத்திக் கொண்டு அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள்; வருடத்திற்கு 30 நாட்கள் அவர்கள் இவ்வாறு செய்வது, நோன்பு அல்லாத காலங்களிலும் நுரையீரலை புதுப்பிக்க வைக்கும் என்ற நல்ல தத்துவத்தின் அடிப்படையில்தான் நோன்பு ஆரம்பிக்கப்படுகிறது.


பதினோரு மாதங்கள் வரை முறையில்லாமல், ஆசை தீர உண்டதனால் களைத்துப் போயிருக்கும் வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்கு, ஒரு மாதத்திற்கு மட்டும் வழக்கமான நேரத்திற்குள் ஏதும் உண்ணுவதோ, பருகுவதோ இல்லாமல், ஆசைகளையும், இச்சைகளையும் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதற்கும், நோய் நொடிகளின்றி வாழவும் வழிவகுப்பது தான், இம் மாதத்தில் நோற்கும் 30 நாள் நோன்பு ஆகும்!


ஒரு நாளில் 10 தடவைக்கும் மேல் டீ, காபி, மற்றும் பானங்கள் அருந்துபவர்கள் இருக்கிறார்கள்; ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை சிகரெட், பீடி என்று புகைப்பவர்களும் இருக்கிறார்கள்; சதா வெற்றிலை பாக்கை வாயில் குதப்புவர்களும் இருக்கிறார்கள்; நேரங்காலம் இல்லாமல் வயிறு புடைக்க உணவை உண்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை, ஆண்டிற்கு ஒரு முறை 30 நாட்கள் நோன்பு இருப்பதன் மூலம் உடலானது முறையற்ற பழக்கங்களுக்கு ஆட்படாமலும், நோய்களின்பால் ஈர்க்கப்படாமலும் நல்ல வழியில் இயக்கம்பெற இந்த நோன்பு அத்தியாவசியமாகிறது.


பதினோரு மாதங்கள், மேற்கூறிய வரைமுறையற்ற பழக்கங்களில் சிக்கியுள்ள மனிதனின் உடல், நச்சுப் பொருள்களால் நிரப்பப்படுகின்றன. வரைமுறையற்ற பழக்கங்கள் மனதுக்கு
சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அவைகள் உடலுக்கு கெடுதலையும் தீங்கையும் விளை விக்கின்றன. நோன்பு மேற்கொள்ளும் 30 நாட்களிலும் பகல் நேரம் முழுவதும், நோன்பு நோற்பது கஷ்டங்கள் கொடுத்தாலும், அவைகள் உடலுக்கும் மனதிற்கும் நன்மையானவற்றை, நாம் அறியாமலேயே உண்டாக்குகின்றன.


மனிதன், நாள் முழுவதும் சுவாசித்தாலும், நுரையீரல் அதிகப்படியாக இஇயங்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை உள்ள 2 மணி நேரமேயாகும். தூங்கும்பொழுது ஐம்புலன்களும் முழுமையாக இஇயங்காமல் இருக்கும். அப்பொழுது நுரையீரல் இயங்குவதைவிட, விழித்திருக்கும்பொழுது இயங்கும் சுவாச இயக்கமானது, நுரையீரலை நல்ல முறையில் புதுப்பிக்கிறது. அதிகாலையில் பல ஆஸ்துமா நோயாளி கஷ்டப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம், அவர்களை ஆஸ்துமா ஏன் எழுப்பிவிடுகிறது? காரணம் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் சரியாக இயங்கமுடியாததாலும் ஐம்புலன்களும் விழித்திருந்தால்தான் நுரையீரல் நன்கு இயங்கமுடியும் என்று இயற்கை கருதுவதாலும்தான்.
இரவு தூக்கத்தின்போது, வயிற்றில் உள்ள உணவு நன்கு ஜீரணமாகி சிறுகுடலுக்கு சென்றுவிடுகிறது. காலை உணவு (ஸஹர்) இந்த நேரத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் வழக்கமான உண்ணும் நேரங்களை திசை திருப்பப்படுகிறது.


இந்த மாற்றத்தின் மூலம் வயிறு, தன்னுடைய பழகிப்போன நேரத்திலிருந்து விலக ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. தேவையில்லாமல் பசித்தல், அதிகமாக பசித்தல், அடிக்கடி பசித்தல் போன்ற தன்மைகள் மாற்றப்படுகின்றன. காலை உணவையும், மதிய உணவையும் உண்ணாமல் இருக்கும்பொழுது நாம் அதிகாலை (ஸஹர்) உண்ட உணவை வயிறு நன்கு ஜீரணித்துவிடு கிறது. வயிற்றில் அமிலங்களை சுரக்கும் சுரப்பிகள், தன் அதிகப்படியான அமிலச் சுரப்பிலிருந்து விடுபடுகின்றன, வயிற்றில் ஏற்படும் இந்த மாற்றம் இஇந்த தாக்கம்......குடல், ஜீரண உறுப்புகள் அனைத்தையும் நன்கு இயங்கும் முறையில் மாற்றுகின்றன.


நோன்பு இல்லாத காலங்களில் அதிகப்படியாக உண்டு, நன்கு ஜீரணிக்கப்படாமல் உடலில் தேங்கியுள்ள கசடுகள், கழிவுப் பொருட்கள் எல்லாம் மெல்ல நீக்கப்படுகின்றன. கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. அதிகாலை (ஸஹர்) உணவை, யாருக்கும் குமட்டல் ஏதுமின்றி நன்றாக சாப்பிடமுடியாமல், அவர்களின் வயிறு, குடல் நன்றாக இருக்கிறது என்று பொருள். யாருக்கு சாப்பிடமுடியாமல், மயக்கம் ஏற்படுவதுபோலவும், வாந்தி வருவது போலவும், இருக்கிறதோ, அவர்களுக்கு பித்தம் அதிகமாகி உள்ளது; குடல், ஜீரண உறுப்புகள் கெட்டுப்போய் இருக்கின்றன என்று அர்த்தம். இந்த நோய்களைத் தீர்ப்பதற்காகவேதான் நாம் நோன்பை மேற்கொள்கிறோம். நோன்பு இருக்கும் நேரத்தில் உணவு பழக்கங்களை நல்ல முறையில் கடைபிடிப்பதால் வயிறு உப்புசம், ஏப்பம், மயக்கம், மலச்சிக்கல் போன்ற உபாதைகளிலிருந்து நிரந்தரமாக விடுபடுகின்றது.


நோன்பு நோற்பதற்கு முக்கிய காரணமே ஆசைகளிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் நாம் விடுதலை பெறவேண்டும்; மேலும், உடலையும் மனதையும் நோயின்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அடிப்படைக் கொள்கைக்காகத்தான்.

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (11)

நோன்புக் காலங்களில் உண்ணும் முறைபற்றி நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடச் சொல்லியிருக்கிறார்.
" அதிகாலை நேரம் என்ற வெள்ளை நூல் இரவு என்ற கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளி வாசலில் தனித்து இருக்கும் போது, உங்கள் மனைவி யருடன் கூடாதீர்கள்.
இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளைத் தாண்ட முற்படாதீர்கள்; இவ்வாறே கட்டுப்பாடுடன் தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.... என்கிறார்.

காலையிலிருந்து, நோன்பு திறக்கும் (இ·ப்தார்) வரையில் அடக்கி வைத்திருக்கும் ஆசையை நோன்பு திறந்து உணவு உண்ணும் நேரத்தில், கட்டுக்கடங்காமல் விட்டுவிடுவது, நோன்பிற்கான அடிப்படைக் காரணத்தையே தகர்த்துவிடும். அளவுக்கதிகமான பசியும், தாகமும் இருப்பது இயற்கை.

அதைக் கீழ்க்கண்ட முறையில் கடைபிடிப்பது பல அஜீரணக் கோளாறுகளிலிருந்தும் உடலை நீண்ட காலத்திற்கு காப்பாற்றும்.
நோன்பு திறக்கும்பொழுது பல அமிலங்கள் சுரந்து வயிற்றில் நிறைந்து நிற்கும், வாயில் உள்ள கசடுகளையும், குடல்கள், வயிற்றில் உள்ள கசடுகளையும் நீக்கும் தன்மை கொண்டது, தேன்.
மேலும் வயிற்றில் நிறைந்துள்ள அமிலத்தின் தன்மையை மாற்றி வயிறு உப்புசம், ஏப்பம், விக்கல், வயிற்று எரிச்சல் போன்றவற்றை தவிர்க்கும் சக்திவாய்ந்தது.

1. பேரீச்சம்பழத்தை, தேனுடன் நனைத்து நன்கு மென்று சாப்பிடுவது நல்லது.
2. எலுமிச்சம் பழச்சாற்றில், இனிப்புக்கு ஏற்றவாறு தேனும், தண்ணீரும் கலந்து மெல்ல மெல்ல பருகுவது நல்லது (ஐஸ் சேர்க்கக்கூடாது, சீனி சேர்க்கக் கூடாது)
3. தேநீர், காபி போன்றவற்றை சுத்தமாக தவிர்க்கவேண்டும். (நோன்பு திறக்கும் நேரத்தில்)
4. எலுமிச்சம் பழச்சாற்றை விரும்பாதவர்கள், சாத்துக்குடி, அன்னாசி பழச்சாற்றை தேனுடன் கலந்து ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
5. இளநீர் மிக நன்மை தரும். இதுவும் வயிற்றிலுள்ள நச்சுக்களை நீக்கும், இந் நச்சுக்கள் சிறுநீராக மாறி வெளியேறிவிடும்.
6. புகை பிடிப்பதன் மூலமாகவோ, ஐஸ் மற்றும் குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு அதிகமுள்ள பானங்களின் மூலமாகவோ நோன்பு திறப்பது மிகவும் ஆபத்து. வயிற்றில் உள்ள அமிலத்தை மேலும் அதிகமாக சுரக்கச்செய்து உடல் நலத்தையே பாழடித்துவிடும்.
7. எந்த பானங்களையும் உபயோகிக்கலாம், ஆனால் வாயு நிரம்பியதாகவோ, ஐஸ் சேர்க்கப் பட்டதோகவே, சீனி சர்க்கரை சேர்த்ததாகவோ இருக்கக்கூடாது, இனிப்புக்கு தேன் ஒன்றே போதுமானது.
8. சூடான பானங்களில் நோன்பு திறக்க விரும்புபவர்கள் காய்கறி சூப், கோழி சூப், ஆட்டு சூப் போன்ற வகைகளை உபயோகிக்கலாம், இதில் மிளகாய் இல்லாமல், சிறிதளவு மிளகு சேர்த்து உபயோகித்தல் நலம் பயக்கும்.
9. எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் (பஜ்ஜி, வடை, சமோசா) வைத்து நோன்பு திறக்காதீர்கள், சாப்பிடும்போது உபயோகியுங்கள்.
மேற்கூறிய பானங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பருகிவிட்டு 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை உணவு உண்ணாமல் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றும், இவ்வாறு சிறிது இடைவெளிக்குப் பிறகு உண்ணுவதால் உணவு நன்கு ஜீரணிக்கப்படும்.

வயிற்று உபாதைகள் இல்லாமலும், மயக்கம், தளர்ச்சி, சோர்வு இல்லாமலும் உடலை நல்ல முறையில் வைத்திடும், அதிகமாக காரம் உள்ள உணவையும், வயிறுமுட்ட உண்ணுதலையும் தவிர்ப்பதன் மூலமாகவும், மெதுவாக சாப்பிடுவதன் மூலமாகவும் மேலும் உடல் நலத்தை வலுப்படுத்த முடியும்.
அதிகமாக சாப்பிடவேண்டும் என்ற‌ எண்ணம் உள்ளவர்கள் அந்த உணவை 2 வேளைகளாகப் பிரித்து 7 முதல் 7.30க்குள் ஒரு வேளை உணாகவும் 10 முதல் 10.30க்குள் இன்னொரு வேளையாகவும் பாதிப்பாதியாக உண்ணலாம். உணவைப் பார்க்கும்போதெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது அடுத்த நாள் காலை (ஸஹர்) வேளைச் சாப்பாட்டைப் பாதிக்கும்.

ஆசையினால் வயிறுமுட்ட உண்டுவிட்டு திக்குமுக்காடுபவர்கள் சிறுக சிறுக வெந்நீரை அருந்துவது ஜீரணத்திற்கு ஏற்ப வயிற்றை பதப்படுத்திவிடும். ஐஸ் தண்ணீர், டீ, காபி குடிப்பது வயிற்றை பதப்படுத்துவது போல் தோன்றினாலும் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

இவ்வாறு நோன்பு நோற்கும் கலையை வளர்த்துக்கொண்டால் இரவு நேர வணக்கத்தில் (தராவிஸ்) சோர்வு, தூக்கம், மயக்கம் போன்றவைகளின் தாக்கம் அதிகமாக இராது, அடுத்த நாள் ஸஹர் வேளையில், தாமாகவே பசி எடுக்க ஆரம்பிக்கும். காலையில் தூக்கம் அதிகமாக வராது, உடல் மெலிவு ஏற்பட்டு தெம்பும் பிறக்கும்.

ஏழை எளியவர்கள் வறியவர்கள் இவங்க மேலேஅனுதாபம் கொள்ள கத்துக்குடுக்குது. நோன்பு இருக்கறதுனாலே மருத்துவ ரீதியாவே பல மாறுதல்கள் உடம்புலே ஏற்படுது. ரத்த அழுத்தத்தை அது குறைக்குதாம். ரத்தக் கட்டியை கரைக்கிற சக்தியை ரத்தத்துலே அதிகப்படுத்துது. Myocardial infraction ஆலே ஏற்படற உயிரிழப்பு பாதியா குறையுது.

தண்ணீர் சாப்பிடாமே இருக்கிறப்போ பிட்யூட்டரி சுரப்பியின் பின்பகுதி (Anti Diuretic Harmoneஐ சுரக்குது. வெளியாகிற சிறுநீர் அளவை இது குறைச்சுடும். அதனாலே உடம்புலே தண்ணீர் சேமிக்கப்படுது.

நோன்பு காலத்துலே Blood Sugar சீரா, ஒரே அளவா இருக்கிற மாதிரியும் உடம்பு அட்ஜெஸ்ட் பண்ணிக்குது.
இப்படி... இதுமட்டுமில்லே, இன்னும் எவ்வளவோ அட்ஜெஸ்ட்மெண்ட் உடம்புக்குள்ளே நடக்குது.நோன்புன்னா... சாப்பிடாமே இருக்கிறது, தண்ணி குடிக்காமே இருக்கிறது... மட்டும் இல்லே...

உலக சுகங்கள் போகங்கள் வேண்டாம்ன்னு ஒதுக்கறது. அடுத்தவங்க மேலே அனுதாப உணர்வு வளர்றதுக்கும் சகிப்புத் தன்மை வளர்றதுக்கும் நோன்பு துணையா இருக்கு!
உலகத்துலே மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் சரியா புரிஞ்சிக்காததுனாலேதான் பலவிதமான பிரச்னைகள் உண்டாகுது.
மனுஷனுக்கு நிம்மதி குறையறதுக்கே இதுதான் முக்கியமான காரணம். பிரச்னையை சரியா புரிஞ்சிக்கிற திறமை நம்மகிட்டே இருந்தா அதை உடனடியா தீர்க்கறதும் சுலபமா இருக்கும்.

மனிதனை மனிதன் சரியா புரிஞ்சிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் குடுக்கறது நோன்புதான். இந்த நோன்பு இறைவனுக்கு நாம ரொம்ப நெருக்கமா இருக்கோம்ங்கற உணர்வை ஏற்படுத்தற நோன்பு!
இதுவரைக்கும் நான் சொன்னது இறைவன் பேர்லே நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடிக்கிற நோன்பை பத்தி.

இதெல்லாம் இருக்கட்டும். இறைவன் பேர்லே நம்பிக்கையே இல்லாத ஒருத்தன் சாப்பிடாமே இருக்கணும்ன்னு ஆசைப்பட்ட கதை ஒண்ணு உங்களுக்குத் தெரியுமா?
அவருகிட்டே ஒருத்தர்... "நம்ம வயிற்றை நிரப்பறது ஆண்டவன்தான்" அப்படின்னார்.
"அது எப்படி... அவரு வந்து நிரப்புவார்...? நாம தானே கையாலே எடுத்து சாப்பிடணும்"ன்னான் இவன்.

அது மட்டுமில்லே அதை சோதிச்சிப் பார்க்கணும்ன்னும் ஆசைப்பட்டான்.
உடனே மனைவிகிட்டே போனான். கட்டுச் சோறு கட்டிக்குடுன்னான். ஒரு பொட்டலம் கட்டி எடுத்துக்கிட்டான். நேரா மனுஷனே இல்லாத ஒரு பாலைவனத்துக்குப் போனான். ஒரு இடத்துலே உக்கார்ந்தான்.
சோற்றுப் பொட்டலத்தை முன்னாடி வச்சான். "நான் இதை கையாலே தொடப் போறதில்லே... நானா சாப்பிடாதப்போ... ஆண்டவன் எப்படி என் வயிற்றை நிரப்புவார் பார்க்கலாம்"ன்னான்.

கையை கட்டிக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு பேசாமே உக்கார்ந்துகிட்டான். கொஞ்ச நேரம் ஆச்சு. அந்தப் பக்கமா ரெண்டு ஆசாமிகள் வந்தாங்க.
அவங்களுக்கு அகோரப் பசி. ரெண்டு பேர்லே ஒருத்தன் அந்த பொட்டலத்தை எடுக்கப் போனான்.

இன்னொருத்தனுக்கு சந்தேகம்.

"இவன் ஏன் பொட்டலத்தை வச்சிக்கிட்டு சாப்பிடாமே உக்கார்ந்திருக்கான். ஒருவேளை இதுலே விஷம் கலந்திருக்குமோ?"ன்னான். இருந்தாலும் இருக்கும்!'ன்னான் இன்னொருத்தன். அந்த ஆள் கிட்டேயே கேப்போம்ன்னு பேச்சுக்குடுத்துப் பார்த்தான்.

அந்த ஆள் பேசவே இல்லை. சந்தேகம் வலுத்தது. ரெண்டு பேரும் அந்த ஆளை வலுக்கட்டாயமா பிடிச்சிக்கிட்டு வாயிலே சாப்பாட்டை திணிச்சாங்க...
வேறே வழியில்லே... சாப்பிட்டுட்டான். இப்ப அந்த ஆளுக்கு வயிற்றை நிரப்பினது யார்?

யோசிச்சிப் பாருங்க.
அதுக்கப்புறம் அந்த பொட்டலத்துலே இருந்துது பூராவையும் அந்த ரெண்டு பேரும் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க.

இந்த ஆள் ஆச்சரியப்பட்டுப் போய் உக்காந்திருந்தான்.
"என்னப்பா இறைவனோட கருணையை நினைச்சி ஆச்சரியப்பட்டுக்கிட்டிருக்கியா?"ன்னு அவனைப் பாத்து கேட்டார் பழைய நண்பர்.

அதுக்கு அவன் "நான் அதை நினைச்சி ஆச்சரியப்படலே..." எப்பவும் நான் கஷ்டப்பட்டு சாப்பிடற எங்க வீட்டு சமையலை அவ்வளவு பிரியமா அந்த ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களே... அந்த அளவுக்கு அதுலே என்ன இருக்கு? அதை நினைச்சித்தான் திகைச்சிப் போய் உட்கார்ந்திருக்கேன்!" அப்படின்னான்.

அண்ணல் நபிகள் நடந்த பாதையில்...! (10)

"வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும்
செலவழிப்பார்கள்; மேலும் சினத்தை
அடக்கிக்கொள்வார்கள்....மேலும் மக்களின்
தவறுகளை மன்னித்து விடுவார்கள்.. இத்தகைய
உயர்ந்த பண்பினரை இறைவன் நேசிக்கின்றான்..." -அருட்குரான்.

மதீனா நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது போன்று இருந்தது. காரணம், அந்தநகரில் மார்க்க மேதைகளும், அறிஞர் பெருமக்களும், சமுதாயத்தின் பிரபலமான பெரியோர்களும், அரசு அதிகாரிகள் என்று அவ்வளவு பேர்களும் ஓரிடத்தில் குழுமியிருந்ததுதான் காரணம். அவர்கள் குழுமியிருந்த இடம் பெரும் மாளிகை! அந்த அரண்மனை போன்ற மிகப்பெரிய மாளிகையில் விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றது.

விருந்தினர்களோடு விருந்தினராக அந்த மாளிகைக்குச் சொந்தக்காரரும் உணவருந்த அமர்ந்திருந்தார். விருந்தினர்களுக்கு அவருடைய இல்லப் பணிப்பெண் பரிமாறிக்கொண்டிருந்தாள். சோள ரொட்டி, கறிக்குழம்பு, பேரித்தம் பழம் போன்றவற்றைக் கொண்டு வந்து பரிமாறுவது அவளின் வேலையாக இருந்தது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது!?

பாத்திரம் கீழே விழுந்த சத்தமும், பணிப்பெண்ணின் அலறலும் விருந்தினர்கள் அனைவரையும் ஒருங்கே ஈர்த்தது. விருந்தினர்களின் பார்வைகள் ஒட்டுமொத்தமாகக் குவிந்திருந்தது அந்த வீட்டு உரிமையாளர் மீது!
ஆம்! பணிப்பெண் கையில் பிடித்திருந்த கறிக்குழம்புப் பாத்திரம் கைதவறி விழுந்த அதிர்ச்சியில் அலறியது அந்தப் பணிப்பெண்தான். சுடச்சுடக் குழம்பும் கறியும் கொட்டியது அந்த உரிமையாளரின் முகத்தில்!

அவரின் முகத்திலும் தாடியிலும், தூய வெண்ணிற ஆடையிலும் கொட்டி வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கறிகுழம்பின் சூடும், காரத்தன்மையும் அவரின் முகம், மூக்கு என்று எரிந்து கொண்டிருந்தது. அதைத் துடைத்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணைச் சுட்டெரிப்பது போல அவர் பார்த்தார். அந்தப் பணிப்பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட, தம் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழத்துவங்கி விட்டாள். விருந்து ஸ்தம்பித்தது! அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று விருந்தினர்கள் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஒரே அமைதி!

அந்த நேரத்தில்.....அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்தப் பணிப்பெண் அருட் குரானின் திருவசனத்தை ஓத ஆரம்பித்தாள். பயம், துக்கம், பீதி, குற்ற உணர்வுகளால் அவளது குரல் தழுதழுத்தது. அப்படி அவள் குரல் நடுங்கி ஓதியபோதிலும் உச்சரிப்பு குன்றாமல் வெகு நேர்த்தியாக ஓத ஆரம்பித்தாள். "இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் செல்லும் பாதையில் விரைந்து செல்லுங்கள். அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறை அச்சமுடையோருக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது...." ஏற்ற இறக்கங்களோடு நிதானமாக ஓதத் துவங்கினாள்.

அது, அந்தச் சூழலையே மாற்றிவிட்டது. உரிமையாளரின் முகத்திலிருந்த சுட்டெரிக்கும் பார்வை மறைந்தது. சாந்தம் மெல்ல, மெல்ல அவரின் முகத்தில் குடியேறியது. அவர் தன் கண்களை மூடிக்கொண்டு பணிப்பெண் ஓதுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கலானார். " .... அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள்; மேலும் சினத்தை அடக்கிக்கொள்வார்கள்...." பணிப்பெண் இவ்வாறு ஓதிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு குரல் கணீரென்று கேட்டது.

" நான் எனது கோபத்தை அடக்கிக்கொண்டேன்.... உரிமையாளர் தன் எரிச்சல் மறைந்த நிலையில் சொன்னார். பணிப்பெண் அதன்பிறகும் ஓதினாள்...." மேலும் மக்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள்...."

" நான் உன்னை மன்னித்துவிட்டேன்.... அவர் உரக்கக் கூவினார். கூடியிருந்த விருந்தினர்கள் முகத்தில் மலர்ச்சி! சிரிக்க மறந்த முகங்கள் புன்னகை பூத்தன! பணிப்பெண் முகத்தில் பரவசம்! அந்தப் பரவசத்தில் தொடர்ந்து ஓதுகின்றாள். ".... இத்தகைய உயர்ந்த பண்பினரை இறைவன் நேசிக்கின்றான்..."

பணிப்பெண் ஓதி முடிக்கவில்லை. சிலிர்த்தெழுந்தார் அவர்! " போ... உன்னை நான் விடுதலை செய்துவிட்டேன். சுதந்திரமாக நீ செல்லலாம்; என்றார். அது மட்டுமல்ல அந்தப் பணிப்பெண்ணுக்கு ஏராளமான வெகுமதிகளைக் கொடுத்து அனுப்பினார். அங்கிருந்த விருந்தினர் முகங்கள் உவகையால் மகிழ்ச்சி பொங்கிப் பூத்தது. சந்தோச சாம்ராஜ்யத்தில் மிதப்பது போன்று பணிப்பெண் உணர்ந்தார்.

இப்பவும் கூட சிலர் இருக்காங்க... எப்டீங்கிறீங்களா? ஆடம்பரமான விருந்து நடந்து கொண்டிருந்தது. சமுதாயத்தில் உள்ள பெரும்புள்ளிகள் எல்லாம் அங்கிருந்தனர். அந்த விருந்தை நடத்துபவர் அரசியல்வாதியிலிருந்து, அதிகாரவர்க்கம் வரை செல்வாக்கு படைத்தவர்; ஆளும்கட்சியில் பெரும் பொறுப்பு வகிப்பவர். தடபுடலாய் விருந்து நடந்து கொண்டிருந்தது. சீருடை அணிந்த வேலைக்காரர்கள் உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். விருந்துச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். விருந்தில் கடைசியாக நெய் மணக்கும் பாயாசம் பரிமாறப்பட்டது. அப்போதுதான், அந்தச் சத்தம் கேட்டது; எல்லோரும் திடுக்கிட்டு சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். கண்ணைப் பறிக்கும் வெள்ளுடையிலிருந்த ஒரு பிரமுகர் முகத்திலிருந்து பாயாசம் வழிந்து சட்டை வேட்டி எல்லாம் பாயாசமாய்க் காட்சியளிக்க பணியாள் "அய்யோ கை தவறி....நடந்து போச்சு... மன்னிச்சுருங்கய்யா" என்று சொல்லி முகத்தை துடைத்துக் கொண்டிருந்தான்.

இதைக் கவனித்த விருந்தை ஏற்பாடு செய்தவர், தாம் சாப்பிடுவதை விட்டுவிட்டு அந்தப் பிரமுகரை நோக்கி விரைந்து சென்றார். எல்லோரும், என்ன நடக்கப் போகுதோ என்று ஒருவித அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ஏண்டா, அறிவு கெட்டவனே, ஒனக்கு கண்ணில்ல.. இப்படியா... மொதல்ல நீ, வெளிய போ...யாருப்பா... அங்க.. இவங்களை அழைச்சிட்டு உள்ள போய் புது துணி குடுத்து மாத்திக்க ஏறப்பாடு செய்" என்று இரைந்தார்.

" சரி...சரி.. பாவம்...கை தவறி விழுந்துருச்சு... நீங்க போய் சாப்புடுங்க" என்று முகத்திலிருந்த பாயாசத்தை ஆயாசமாய் துடைத்துக்கொண்டே சொன்னார் அந்த ஆள்!

விருந்து எல்லாம் முடிந்தது, வந்தவங்கள்ளாம் கெளம்பினாங்க. விருந்து கொடுத்த அந்த மனிதரும் அவருக்கு வேண்டப்பட்ட ஒருத்தரும் மட்டும் அங்க இருந்தாங்க. எங்க அவன்? கூப்புடு.... என்று கூப்பாடு போட்டார் அந்தப் பெரிய மனிதர்.

"அய்யா.... தெரியாம... கைதவறி நடந்து போச்சு மன்னிச்சுருங்க அய்யா....என்றவாறே, சரி நம்ம சீட்டுக் கிழிஞ்சுது இன்னையோட என்ற முடிவோட வந்தான், அந்தப் பணியாள்.

"சரி..சரி.. கை தவறி விழுந்ததுக்கு நீ, என்ன பண்ணுவே, எல்லாருக்கும் முன்னாடிதிட்டிட்டனேன்னு வருத்தப்படாதே இந்தா...இதச் செலவுக்கு வச்சுக்க... ஒருவாரம் லீவு..ஊருக்குப் போயிட்டுவா?"என்று ஆயிரம் ரூபாயை நீட்டினார். பணியாள் ரூபாயை வாங்கிக்கொண்டு.

"அப்ப வர்றனுங்க", என்று சொல்லிக் கிளம்பினான் முகமெல்லாம் சந்தோசம் சுடர்விட!

பெரியமனிதருக்கு அருகிலிருந்தவர், "என்னாங்க கூப்புட்டு சீட்டைக் கிழிச்சு வூட்டுக்கு அனுப்பப் போறீங்கன்னு நெனைச்சேன். செலவுக்கு கைநெறையா காசும் குடுத்து அனுப்புறீங்களே. உங்க பெருந்தன்மையே.. பெருந்தன்மைங்க..." என்றார்.

"அட, நீ வேற... அந்தாளு என்னை எதிர்த்துப் பேசுற முக்கியமான எதிர்கட்சியாளு. எனக்கு கூப்புட இஷ்டமே இல்லை; ஒருவகையில கூப்புட்டு மூக்கறுத்தமாதிரி இப்டியானதுல எனக்கு உள்ளூர சந்தோசம்.... அதான் இவனுக்கு ஒருவார லீவும் பணமும் குடுத்தேன்" அப்டீங்கிறார்...!?